“தமிழ் உலகம் மடற்குழுவில் நண்பர் மணி மு. மணிவண்ணன் அவர்களின் அஞ்சல் இங்கு முன்னிலை செய்யப்படுகிறது”
தலைவர் இருப்பது உண்மையோ! பொய்யோ?
அறவழியோ! மறவழியோ?
எது எப்படி இருப்பினும், ஞாயிறன்று இருண்மதி, அமாவாசை, நீத்தார் நினைவுநாள்.
திங்களன்று அமெரிக்காவில் நீத்தார் நினைவுநாள்.
ஒரு மாபெரும் இனப் படுகொலை நடந்திருக்கிறது. அதில் எண்ணற்ற மக்கள், நம்மவர், தமிழர்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களை நினைவு கூறுவோம்.
இருபத்து ஐந்து ஆண்டு காலமாக ஓர் இன விடுதலைப் போர் நடந்திருக்கிறது.
அதில் போராடியவர்கள் பலர்.
அவர்களை நினைவு கூறுவோம்.
தங்கள் உயிரைக் கொடுத்தாவது தம் மக்கள் தன்மானத்தோடு சொந்த நாட்டில்,
தமிழீழத்தில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு போராடியவர்கள் அந்தப் போராளிகள்.புறநானூற்றுத் தமிழ் மறத்தையும் விஞ்சும் வகையில், ஆண்களும் பெண்களும் இணைந்து போராடிய மறப்போர் அது.
நம்மில் பலர் வெவ்வேறு சமய நம்பிக்கை கொண்டவர்கள். வெவ்வேறு அரசியல்
இயக்கங்களைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு நாடுகளில் வாழ்பவர்கள். ஆனால் நம்
அனைவரையும் இணைக்கும் ஒரே பாலம், நம் தமிழ் மொழி.நாம் தமிழர்கள்.
இன்று எங்கே நாம் வாழ்ந்தாலும், தமிழருக்காக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ
வேண்டும் என்பதற்காக, அறமோ மறமோ, சரியோ தவறோ, தம் உயிரைக் கொடுத்துப் போராடிய வீரர்கள் இன்று அனாதைப் பிணங்களாக, மாற்றான் சுட்டெரித்துப் பொசுக்கிக் கடலில் வீசும் நிலையிலும் தம் வீரத்தால் உயர்ந்து நிற்கிறார்கள்.உலகெங்கும் பரந்து பட்டு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் உள்ளங்களில்
குடியிருக்கும் இந்த மறவர்களுக்கு நாம் இன்று வீர வணக்கம் செய்வோம்.தம்மை உருக்கிப் பிறருக்கு வெளிச்சம் காட்ட முயன்றவர்களை நம் நினைவில்
கொள்வோம்.தம் உரிமைகளுக்காகப் போராடி வீழ்ந்த மறவர்கள் நினைவுகளை என்றென்றும் நம் நெஞ்சில் நிறுத்துவோம்.
நண்பர்கள் வேண்டியதுபோல், இந்த ஒரு கிழமை, நீத்தாருக்கு அஞ்சலி செய்யும் முகமாக நாம் வணங்குவோம். நமக்கிடையே இருக்கும் வேற்றுமைகளுக்கு இந்த ஒரு கிழமை விடுப்பு கொடுப்போம். பின்னர், வரும் ஞாயிறன்று, அவரவர் வாழும் ஊர்களில், வழிபாட்டுத் தலங்களில், நண்பகலில் மணியடித்து நீத்தாருக்கு விடை கொடுப்போம்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை,
- கணிஞன் மணிவண்ணன்



பின்னூட்டமிட